JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, August 5, 2019

இரண்டாக பிரிகிறது ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கி குடியரசுத் தலைவர் அறிக்கை வெளியீடு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து மத்திய அரசு எடுத்த முடிவுகளை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர். இதையடுத்து, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அதிகக் கூச்சல் எழுப்பும் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.



மத்திய அரசின் அறிவிப்பினால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி மாநில அந்தஸ்தை இழக்கிறது. அதோடு, காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. காஷ்மீர், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும். இதன் மூலம் லடாக் சட்டப்பேரவையோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோ இல்லாமல் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.