Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 15, 2019

நூறாண்டு சாதனையில் சேர்த்த வேலை, 8 ஆண்டாகியும் தொகுப்பூதிய நிலை? பணிநிரந்தரம் எப்போது?பகுதிநேர ஆசிரியர்கள் கவலை!

நூறாண்டு சாதனையில் சேர்த்த வேலை, 8 ஆண்டாகியும் தொகுப்பூதிய நிலை?
பணிநிரந்தரம் எப்போது? ஜெயலலிதா நியமித்த பகுதிநேர ஆசிரியர்கள் கவலை!
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:-
111வது நாளில் பணிநியமனம்:-
14வது சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்த 105வது நாளில்110விதியின் கீழ் 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க ஆண்டொன்றுக்கு 99 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் 77வது நாளில் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் அரசாணை வெளியிட்ட 111வது நாளில் இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்தனர்.
இந்நியமனம் அதிமுக அரசின் ஓராணடில் நூறாண்டு சாதனையாக சேர்த்து சாதனை மலராக வெளியிடப்பட்டது.



அரசாணைப்படி மே மாதம் சம்பளம், கூடுதல்பள்ளிகளில் வேலை வழங்கி சம்பளத்தை உயர்த்துக:-
நூறாண்டு சாதனைகளில் ஒன்றாக வெளியிடப்பட்ட இவ்வேலையில் மே மாதம் சம்பளம் மறுப்பதும், கூடுதலான பள்ளிகளில் வேலை வழங்காமல் இருப்பதும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக உள்ளது.
110விதியின் கீழ் அனைத்து மாதங்களுக்கும் சேர்த்தே நிதி ஒதுக்கப்பட்டது. அரசாணை 177லும் மே மாதம் சம்பளம் கிடையாது என ஆணையிடப்படவில்லை. ஆனால் பணியில் சேர்ந்த பின்னர் 2011-12 முதல் 2019-20வரை எட்டு ஆண்டுகளாக மே மாதத்திற்கு சம்பளம் தரமால் மறுப்பது அரசாணையை மீறிய செயலாகும்.
ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் குடும்பத்தை எவ்வாறு நடத்துவது?. ஒரு மாதத்திற்கு மட்டும் எந்த வேலைக்கு செல்வது. ஒரு மாதத்திற்கு மட்டும் யார் வேலை தருவார்கள்?. இதனை கல்வித்துறை அதிகாரிகளும், அரசும் சரிசெய்து ஒவ்வொருவருக்கும் முறைப்படி சேரவேண்டிய ரூ.53 ஆயிரத்து 400ஐ நிலுவைத்தொகையாக வழங்கவேண்டும்.
மேலும் காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியரே அதிகபட்சமாக 4 பள்ளிகள்வரை கூடுதலாக பணிபுரிந்து அதற்கான சம்பளத்தை அந்தந்த பள்ளிகளிலே பெற்றுக்கொள்ளலாம் என ஆணையிட்டுள்ளது.
2014ம் ஆண்டில் ஏற்பட்ட 1380 காலிப்பணியிடங்கள் இப்போது அதிகரித்து 4ஆயிரமாக ஆகிவிட்டது. ஆனால் ஒருவருக்கும் கூடுதலான பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.


தற்போது ஒரு பள்ளிக்கு ரூ.7ஆயிரத்து 700 சம்பளம் தரப்படுகிறது. கூடுதலான பள்ளிகள் வழங்கினால் சம்பளம் இரட்டிப்பாகி ரூ.15ஆயிரம், ரூ.20ஆயிரம், ரூ.30ஆயிரம் என கிடைக்கும். இதனையும் அரசு இன்னமும் மறுத்து வருகிறது.இதனால் ஏறிவிட்ட விலைவாசியால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி கடன்சுமையில் தள்ளப்பட்டு வருகிறோம். இதனை போக்கிட கூடுதலாக பள்ளிகளை வழங்கி சம்பள உயர்வுக்கு அரசு வழிவகுக்க வேண்டும்.
ஆந்திராவைப்போல ரூ.14ஆயிரம் சம்பளம் தருக:-
இதே எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் பணிபுரியும் ஆந்திர மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2017ம்ஆண்டுவரை ரூ.6ஆயிரம் சம்பளம் தரப்பட்டது. ஆனால் 2018ம்ஆண்டு முதல் இதனை 236 சதவீதம் உயர்த்தி தற்போது ரூ.14ஆயிரத்து 203 சம்பளமாக தருகிறார்கள்.
ஆந்திராவில் தரும்போது தமிழகத்திலும் குறைந்தபட்சம் அதே சம்பளத்தை தர நடவடிக்கையை தமிழக அரசும் கல்வித்துறை அதிகாரிகளும் மேற்கொள்ளவேண்டும்.
ஆந்திரா சம்பளத்தை தரவில்லை என்றாலும் திட்டத்தை மேம்படுத்தி அதிகமான பள்ளிகளில் பணி வழங்கி குறைந்தபட்சமாக சம்பளம் உயர்த்தி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



7வது ஊதியக்குழுவின் 30 சதவீத உயர்வை அமுல்செய்க:-
7வது ஊதியக்குழுவின் அரசாணைப்படி பகுதிநேரமாக தொகுப்பூதிய திட்ட வேலையில் உள்ளவர்களுக்கும் 30சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. அரசின் திட்ட வேலையில் பகுதிநேரமாக வேலைசெய்து வரும் எங்களுங்கு இதனை அமுல்படுத்தி வழங்கி இருந்தால் சம்பளம் உயர்ந்து இருக்கும். ஆனால் அரசு இன்னமும் அமுல்செய்யவில்லை.தினக்கூலிகளுக்கும் ஊதியம் உயர்த்தி தரும்போது ஆசிரியர்களான எங்களை வேறுபடுத்தி பார்ப்பது துரதிஷ்டவசமான ஒன்று.


பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் என்ற அமைச்சர் அறிவிப்பை நடமுறைப்படுத்துக:-
பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் என கல்விஅமைச்சர் செங்கோட்டையன் 2017ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். ஆனால் இதுவரைசெயல்படுத்தவில்லை. இதெல்லாம் நடைமுறைப்படுத்தி இருக்கலாம். கல்விஅமைச்சர் சொன்னபடி கமிட்டி அமைக்காததால் நம்பிக்கை இழந்து நிற்கிறோம். தொகுப்பூதிய நிலையிலேயே ஏற்கனவே 8ஆண்டுகள் ஓடிவிட்டன. இதில் இருந்து இழந்த எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இனி பணிநிரந்தரமே ஓரே தீர்வு. இதனை அரசு காலங்கடத்தாமல் செய்திட வேண்டும்.




ரூ.1627 கோடி நிதி திரும்ப ஒப்படைப்பு:- பணிநிரந்தரத்திற்கு பயன்படுத்தி இருக்கலாமே!:-
கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் இடைநிலை கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின்கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த ரூபாய் ஆயிரத்து 627 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அது உபயோகப்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை பணிநிரந்தரம் கோரிவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும், மேலும் இதே எஸ்.எஸ்.ஏ.வில் வேலைசெய்யும் இதர ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் பயன்படுத்தி இருக்கலாம்.
தற்போது தரப்படும் தொகுப்பூதியமான ரூ.7ஆயிரத்து 700 தருவதற்கு அரசுக்கு சுமார் ரூ.115கோடி செலவாகிறது. இக்குறைந்த சம்பளத்தை உயர்த்தி கோவா, ஆந்திராவைபோல ரூ.15ஆயிரமாக தருவதற்கு இப்போது ஒதுக்கப்படும் நிதியிலுருந்து மேலும் ரூ.100கோடி ஒதுக்கினால் போதும்.
அதேவேளையில் இதே பாடப்பிரிவுகளில் நிரந்தரப்பணியில் இருப்போர் நிலையில், இடைநிலை ஆசிரியர் நிலையில் எங்களை பணிநிரந்தரம் செய்ய இப்போது ஒதுக்கப்படும் நிதியிலுருந்து மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது. இதனை அரசு 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட உடனடியாக பரிசீலித்து வழங்க முன்வரவேண்டும்.



5 ஆண்டை நிறைவு செய்வதற்குள் புதிய அரசாணையிட்டு பணிநிரந்தரம் செய்க:-
எங்கள் நியமனத்திற்கு பின்னர் காவல்துறையில் ரூ.7ஆயிரத்து 500 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இளைஞர் சிறப்பு படை, கல்வித்துறையில் ரூ.5ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் இரவுக்காவலர்கள் பின்னர் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர். எங்களை மட்டும் மத்திய அரசின் திட்ட வேலை என்று சொல்லியே பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளது மனிதநேயம் இல்லை.
ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப்போராட்ட நாட்களில் பள்ளிகளை திறந்து நடத்துவதோடு மட்டுமின்றி பள்ளிப்பணியில் எல்லா வகையிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களை கல்வி அமைச்சரும், முதல்வரும் பெருமனதுடன் ஒரே அரசாணையில் பணிநிரந்தரம் செய்திட முடியும். 15வது சட்டசபையை நிறைவு செய்ய இன்னும் 16 மாதங்களே உள்ளது. இதற்குள் அரசே விரைந்து முடிவு செய்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என்றார்.



தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்பணியிடங்களாக மாற்றுக:-
ஜெயலலிதா வழியில் ஆசியில் ஆட்சி நடத்துகிறோம் என சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் 8 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதே அமரர் ஜெயலலிதாவுக்கு செய்யும் சிறப்பாகும். இந்த எஸ்.எஸ்.ஏ. திட்ட வேலைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை அவரவர் பாடப்பிரிவுகளில் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்வார்களா என எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

நலவாரியங்கள் மூலம் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிதி:- பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்குக:-
கட்டிடத்தொழிலாளர்கள், மீன்பிடித்தொழிலாளர்கள் தினக்கூலிகள் இறந்துவிட்டால் அவர்களுக்கான அரசு அமைத்துள்ள நலவாரியங்கள் மூலம் 1இலட்சம் 2இலட்சம், 3 இலட்சம் என கொடுக்கிறார்கள். ஆனால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த கல்வி (எஸ்.எஸ்) என எதிலும் எங்களுக்கென்று இறந்துபோனவர்களுக்கு அரசு நிதி கொடுத்ததும் இல்லை. எங்களுக்கு எந்த நலவாரியமும் அரசு அமைக்கவும் இல்லை.ஏற்கனவே இறந்துபோனவர்களின் நிலையும் எங்களின் நிலையும் ஒன்றாகவே இருக்கிறது. இறந்து போனவர்கள் வேலைக்கு வராததால் சம்பளம் இல்லை, உயிரோடு இருக்கும் நாங்கள் வேலைக்கு வருவதால் சம்பளம் உண்டு. எனவே பகுதிநேர ஆசிரியர்களில் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி கொடுக்க முன்வரவேண்டும்.
இத்திட்ட வேலையில் 16ஆயிரம்பேரை பணியமர்த்திய அரசு எங்களின் துயரை துடைக்காமல் வேடிக்கை பார்ப்பது எந்தவகையில் நியாயம் என அனைவரும் கவலையில் உள்ளதை அரசு போக்கவேண்டும்.

வேலையின்மையே நாட்டிற்கு பெரும் பிரச்சனை - தீர்வு காண்க:-
இன்றைய நிலையில் தமிழகத்தில் 80 இலட்சம் வேர் வேலைக்காக காத்திருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த நிலையில் 16ஆயிரம் பேரை எஸ்.எஸ்.ஏ. திட்ட வேலையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்துவிட்டு பணி நிரந்தரப்படுத்தாமல் அரசு மௌனம் காப்பது பெருகிவரும் வேலையின்மையை ஒழிப்பதற்கு தீர்வாக அமையாது. இன்றுள்ள தமிழகத்தின் பிரதான பிரச்சனைகளால் பகுதிநேர ஆசிரியர்கள் படும் இன்னல்கள் அரசின் கவனத்தை ஈர்க்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம்.


9 ஆண்டுகளில் போராட்ட நாட்களில் பள்ளிகளை நடத்தி இருக்கிறோம், ஆசிரியர்கள் விடுப்புகள் எடுத்தபோதும் வகுப்புகளை நடத்தி வருகிறோம், மாணவர்கள் சேர்க்கையிலும் ஈடுபட்டு வருகிறோம். கிட்டதட்ட ஒரு உதவியாளராக பயன்படுத்தப்பட்டு வருகிறோம்.அதிகபட்ச கல்வித்தகுதியும் உள்ளது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு ரூ.10ஆயிரம் சம்பளம் தருகிறோம் என அரசு அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது. புதிதாக பணிக்கு வேறு ஒருவரை தேடும் அரசு,ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் எங்களை ஏற்க மறுப்பது சமநீதியாக தெரியவில்லை. ஆங்கிலவழிக்கல்வியை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம், அங்கன்வாடிகளை நடத்தவும் தயாராகவே உள்ளோம். ஆனால் அரசு எங்களை எதிலும் முன்னுரிமை கொடுத்து முன்னேற்றாமல் வேடிக்கை பார்த்து வருவதாகவே தெரிகிறது. இதனால் எங்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக வருகிறது.
எனவே அரசு சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூபாய் 15ஆயிரம்வரை அதிகபட்ச சம்பளத்தையோ அல்லது பணிநிரந்தரத்தையோ உடனடியாக செய்திட முன்வரவேண்டும்.
இப்படிக்கு,
சி.செந்தில்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் நம்பர் : 9487257203.