JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, September 14, 2019

அரசாணை வெளியீடு 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: கல்வியாளர்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த சட்டம் 1.4.2010 முதல் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிக்கை வெளியிட்டது. இதன்பேரில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் மேற்கண்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தம் தொடர்பான அறிவிக்கை மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.



அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்வில் தோல்வியுறும் குழந்தைகள் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தொடக்க கல்வியை முடிக்கும் வரை எந்த குழந்தையும் பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் இதர துறைகளின் கீழ் வரும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆகியவற்றில் 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் 2018-2019ம் கல்வி ஆண்டு முதல் அரசுப் பொதுத் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டி தொடக்க கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார்.



தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்து அதை ஏற்று 2019-2020ம் கல்வி ஆண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்வு நடத்த தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்று அறிவித்துள்ளது, இது மாணவர்கள் மீதான சுமையை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment