Breaking

Sunday, September 29, 2019

காந்தி பிறந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


காந்தி ஜயந்தியன்று பள்ளி மாணவர்கள் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து வகை பள்ளி மாணவர்கள் மூலமும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காமல் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பொருள்களை சேகரித்தபடி மாணவர்கள் வீதிகளில் ஓடுவதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.



இதற்குத் தேவையான சாதனங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், காந்தி ஜயந்தி நாளில் மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்வை விடியோ பதிவு செய்து துறை இயக்குநரகத்துக்கு அன்று மாலையே அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.