Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 5, 2019

ஆசிரியர் தினம் - ராஜ்கிரணின் வியக்க வைக்கும் பதிவு


இன்று ஆசிரியர் தினம். சமூக வலைத்தளம் பக்கம் போனாலே பலரும் அவர்களது பள்ளிக் காலத்து பிளாஷ்பேக் நினைவுகளை எழுதி வருகிறார்கள். அதில் சுவையான சுவாரசியங்கள் பல அடங்கி இருக்கின்றன.நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ராஜ்கிரணின் ஆசிரியர் தின பதிவு வியக்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. அவரது பதிவில் சுமார் 40 ஆண்டு காலத்துக்கு முந்தைய அவரது ஆசிரியர்களைப் பற்றி ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கே அவர்களது ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ராஜ்கிரண் 40 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படித்த போது அவருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது உண்மையிலேயே வியப்புதான்.அவரது பதிவில், ஆசிரியர் தின நன்னாளில், எனக்கு கல்விப்பிச்சை அளித்த, ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்...1955 முதல் 1966 வரையிலான காலம்...இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப்பள்ளியில், முதல் வகுப்பு ஆசிரியர் மோஸஸ் ஐயா அவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார் ஐயா அவர்களுக்கும்,

மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம் அம்மா அவர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் ஐயா அவர்களுக்கும், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும், சிறப்பு தமிழாசிரியர் நடராஜன் ஐயா அவர்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு ஐயா அவர்களுக்கும்,

பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகந்நாதன் ஐயா அவர்களுக்கும்,சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர் செல்வம் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும்,என் பணிவையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன்...அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும், அவர்கள் மனச்சாந்தியுடனும், சமாதானத்துடனும், நிறைவோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..." என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment