
அழியும் நிலையில் இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காக்க மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கூண்டுகளை, சீர்காழியைச் சேர்ந்த விழுதுகள் இயக்கம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனது.
செல்போன் டவர்களின் கதிர்வீச்சு காரணமாக, இந்த பறவை இனம் குறைந்து விட்டதாக பொதுவான கருத்து நிலவி வந்தாலும், செல்போன் டவர் மட்டுமல்ல, நகர் மயமாக்கலும், உணவுப்பொருட்களில் வேதிப்பொருட்களின் கலப்பும் இதற்கு ஒரு காரணமாகும். ஓட்டுவீடுகளை மாடங்களாக கொண்டு கூடுகட்டி வசிக்கும் சிட்டுக்குருவிகள், சிறு நகரங்கள், கிராமங்களில், பழைமையான வீடுகள் அழிக்கப்பட்டு, சிமெண்ட் கட்டிடங்கள் உருவாக்கப்படும் பொழுது, அவற்றின் வசிப்பிடங்கள் இல்லாமல் போகின்றது. சிட்டுக் குருவிகளின் உணவான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட சிறு தானியங்கள் உற்பத்தி குறைந்து போன நிலையில், நெற்பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.
நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், நெல்மணிகளில் கலந்துவிடுகின்றன. இவற்றை உண்பதால், சிட்டுக் குருவிகளின் முட்டைகளின் மேல் ஓடுகள் இல்லாமல், கலங்கிய முட்டையாக இடுகின்றன. இதனால், இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக பறவை பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்கள், திடீர் நகரங்களாக மாறிப்போனதும், சிட்டுக்குருவிகளின் வசிப்பிடங்கள் காணாமல் போனதற்கு ஒரு காரணமாகும். சினிமா பாடல்களில் மட்டும் போற்றப்படும் சிட்டுக்குருவிகள் இனம் உலக அளவில் அழிந்து வரும் நிலையில் அவற்றை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாகை மாவட்டம், சீர்காழியை சார்ந்த சரவணன் என்ற இளைஞர், விழுதுகள் இயக்கம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு அமைப்பை நடத்திவருகின்றார். இந்த இயக்கம் மூலம், சிட்டுக் குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற படி மரத்தினால் ஆன கூடுகளை தயார் செய்து பொதுமக்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இலவசமாக அளித்து வருகின்றார். இந்த கூடுகளில் தானியங்கள், நீர் வைப்பதற்கு பிரத்யேகமான இடம் உ ள்ளது.
வீட்டின் சுவற்றில் கைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்த கூட்டினை வைத்துவிட்டால், குருவிகள் வந்து செல்லும் என்று தெரிவிக்கின்றார். இது வரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகளை வழங்கியுள்ளார் சரவணன். அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை காப்பாற்ற நாமும் மருந்தில்லா இயற்கை விவசாயத்திற்க்கு மாறி, வீட்டின் மாடியில் உணவு, தண்ணீரை வைத்து, வீடுகளில் கூட்டை கட்டி முயற்சி செய்யலாமே!






No comments:
Post a Comment