JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, November 19, 2019

சர்க்கரை ரேஷன் கார்டுகளை இன்று முதல் அரிசி கார்டாக மாற்றலாம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இதுவரை சர்க்கரை மட்டுமே வாங்கி வந்த குடும்ப அட்டை தாரர்கள் இனி தங்கள் கார்டை அரிசி பெறக்கூடிய கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.




இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10 லட்சத்து 19,491 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.




சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, இன்று முதல் 26.11.2019 வரை https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.




அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.