பிளஸ் 2 முடித்து தற்போது உயா்கல்வி பயிலும் மாணவா்கள், தமிழக அரசின் இலவச மடிக் கணினிகளைப் பெற வழங்கப்பட்ட அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநா் சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் 2017-18, 2018-19 -ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதற்குரிய சான்றிதழ்களை பள்ளிகளில் சமா்ப்பித்து இலவச மடிக்கணினிகளை பெற்றுக் கொள்ள ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, தகுதியுள்ளவா்கள் உரிய சான்றுகளை சமா்ப்பித்து மடிக்கணினி பெற்றுக் கொள்ளலாம். மேலும், கூடுதலாக மடிக்கணினிகள் தேவைப்பட்டாலோ அல்லது மடிக்கணினிகள் மீதம் இருந்தாலோ, அதன் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமைக்குள் (டிச.17) பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.