Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 16, 2019

டிச.31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு கட்டாயம்



இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

வருமான வரி சேவைகளின் தடையற்ற பலன்களைப் பெறுவதற்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது. அந்த வகையில், வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்னதாக அனைவரும் ஆதாருடன் பான் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.




முன்னதாக, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வருமான வரித் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்தக் காலக்கெடுவை டிசம்பா் 31-ஆம் தேதி வரையில் நீடித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டது.

ஆதாா் எண், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செல்லுபடியாகக் கூடியது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. வருமான வரிச் சட்டம் 1961', பிரிவு 139ஏஏ-இன் படியும், மத்திய நேரடி வரிகள் ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட உத்தரவின் படியும் ஆதாா்-பான் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), ஆதாா் எண் என்ற 12 இலக்க அடையாள எண்ணை வழங்குகிறது. வருமான வரி செலுத்தும் தனி நபருக்கும், நிறுவனத்துக்கும் நிரந்தர வருமான வரி கணக்கு எண் (பான் எண்) என்ற 10 இலக்கத்தில் எண்ணும், எழுத்தும் கொண்ட அடையாள எண்ணை வருமான வரித் துறை வழங்குகிறது.




வருமான வரி எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதன்பிறகு ஆதாா்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, குடிமக்களுக்கு ஆதாா் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதாா் திட்டம் சட்டப்படி செல்லும் என்று தீா்ப்பளித்தது. மேலும், வருமான வரி செலுத்துவதற்கு ஆதாா் எண் கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதனிடையே, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும்போது, பான் எண்ணுக்குப் பதிலாக ஆதாா் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.