Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 17, 2019

இரண்டாம் கட்ட தேர்தல் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு

ஒரே ஆசிரியருக்கு 2 கட்ட தேர்தல் பணி ஒதுக்கீடு செய்துள்ளதை சரி செய்யாவிட்டால் 2ம் கட்ட தேர்தல் பணியினை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,524 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.




தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடந்து முடிந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் தலைமை அலுவலருடன் சேர்த்து 7 பேர் பணியாற்ற உள்ளனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் இரண்டு வார்டுகள் வரும் பட்சத்தில் 8 ஊழியர்கள் வரை பணியாற்ற உள்ளனர். இதன்படி மாவட்டத்தில் 1,576 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.




இந்நிலையில் தேர்தல் பணி நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதல்கட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு 2ம் கட்ட தேர்தலிலும் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளையில் 50 சதவீத ஆசிரியர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என இரண்டு கட்ட தேர்தலிலும் பணி வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.




இதேபோல அலுவலக உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முதல்கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் புகார் தெரிவித்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்ைல. இதனால் அதிருப்தியடைந்துள்ள ஆசிரியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்காவிட்டால் 2ம் கட்ட தேர்தல் பணிைய புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.




இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது: வாக்குச்சாவடி பணி நியமனத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளது. ஒரே ஆசிரியர் 2 கட்ட தேர்தல் பணியும், ஒரு சில குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு எவ்வித பணியும் வழங்காமல் புறக்கணித்துள்ளனர். திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இது நடைபெற்றிருப்பதாக சந்தேகிக்கின்றோம். தேர்தல் பயிற்சி வகுப்பில் எங்களது புகாரை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே 2ம் கட்ட தேர்தல் பணியை புறக்கணிப்பது குறித்து ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம் என்றனர். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, பணி ஒதுக்கீடு கணினி மூலம் ரேண்டம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சியில் பணி வழங்கப்படாது. தற்போது பணி ஒதுக்கப்படாதவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சியில் பணி கட்டாயம் வழங்கப்படும் என்றனர்.