Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 9, 2020

பெற்றோருக்கு கல்வி கற்பிக்கும் மாணவர்கள்


எழுத, படிக்க தெரியாத பெற்றோருக்கு, அவர்கள் பிள்ளைகள் கல்வி கற்பிக்கும் கருத்தை வலியுறுத்தி, அரசு பள்ளி தயாரித்த, 'தி ஹோம் டியூடர்' என்ற ஆவணப்படத்திற்கு, மாநகராட்சி விருது வழங்கி கவுரவித்துள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும், பல ஏழை மாணவ - மாணவியரின் பெற்றோர் எழுத, படிக்க தெரியாதவர்களாக உள்ளனர். பள்ளியில், படிப்பு திறனை மதிப்பிடும், மாணவர் திறன் பதிவேடு என்ற, புராகிரஸ் கார்டில், பெற்றோர் கையெழுத்து போட வேண்டும்.



ஆனால் எழுத, படிக்க தெரியாத பெற்றோர், கையெழுத்துக்கு பதில், கைநாட்டு வைக்கின்றனர். இதனால், அவர்களின் பிள்ளைகள், சக மாணவர்களால் ஏளன பேச்சுக்கு ஆளாகின்றனர். அதோடு, பெற்றோர் படிக்கவில்லை என்ற கவலையும், அவர்களுக்கு ஏற்படுகிறது.கைநாட்டு போடும் பெற்றோரை எழுத, படிக்க வைக்கும் நோக்கத்தில், அடையாறு, காமராஜர் அவென்யூவில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி நிர்வாகம், ஓர் ஆவணப்படம் தயாரித்துள்ளது. 'தி ஹோம் டியூடர்' என்ற ஆவண படத்தில், கைநாட்டு போடும் பெற்றோர் மற்றும் அவர்கள் பிள்ளைகள் நடித்துள்ளனர். பள்ளி வளாகத்தில், ஒரு மாணவன், 'நம்முடன் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், கையெழுத்து போடுகின்றனர்.



நம்ம பெற்றோர் மட்டும் கைநாட்டு வைக்கிறார்களே; அடுத்த முறை, ரிப்போர்ட் கார்டில் சூப்பரா கையெழுத்து போட வைக்கிறோம்' என, சக மாணவனிடம், விரக்தி கலந்த தன்னம்பிக்கையில் பேசுகிறான்.வீட்டுக்கு சென்றதும்,பெற்றோர் கையை பிடித்து,அவர்கள் பெயரை எழுத கற்று கொடுக்கின்றனர். அதன்பின், உறவினர்கள் பெயர், கடைகளின் பெயர், பேருந்து வழித்தட பெயர்களை எழுத, வாசிக்க கற்றுக் கொடுக்கின்றனர்.அடுத்த மாதம் பள்ளிக்கு செல்லும் பெற்றோர், மாணவர்கள் முன்னிலையில், தன் பிள்ளைகளின் புராகிரஸ் கார்டில் கையெழுத்து போடுகின்றனர்.




தான் கற்க காரணம் என் பிள்ளைகள் என, மாணவர்கள் மத்தியில் பேசுவதுடன் படம் முடிகிறது. இந்த ஆவணப் படம், 3 நிமிடத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.படத்தில் நடித்த மாணவர்கள் கூறிய தாவது: எங்கள் பெற்றோருக்கு எழுத, படிக்க தெரியாது. அவர்களுக்கு, நாங்கள் எழுத கற்றுக் கொடுத்ததை, ஆவணப் படமாக்கினோம். இதற்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தான் காரணம். பெற்றோர் வழியாக, அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கும் எழுத, படிக்க கற்றுக் கொடுக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.படத்தை இயக்கிய ஆசிரியை விஜயலட்சுமி கூறுகையில், ''எழுத, படிக்க தெரியாத பெற்றோரின் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த, இந்த படத்தை இயக்கினோம். இந்த படத்திற்கு, மாநகராட்சி விருது வழங்கி கவுரவித்தது,'' என்றார்.- நமது நிருபர்-