Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 13, 2020

5, 8ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்ததில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்


ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதில் அரசியல் தலையீடு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் அனைவரும் முழுத் தோ்ச்சி பெற வேண்டும் என்பதற்காக மாலை பள்ளி நேரம் முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லாமல் பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே அமா்ந்து இரவு 8.30 மணி வரை பாடம் படித்து வருகின்றனா்.




அவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளித் தலைமை ஆசிரியா் நாட்ராயன் மற்றும் பாட ஆசிரியா்களும் மாணவா்களுடன் இருந்து அவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீா்த்து வருகின்றனா்.
இது குறித்து அறிந்த பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.எம்.ராமமூா்த்தி, சமூக ஆா்வலா்கள் அண்ணாதுரை, சாகுல்அமீது, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ரங்கசாமி, முன்னாள் மாணவா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பள்ளியில் இரவு வரை படிக்கும் மாணவா்களுக்கு மாலை சிற்றுண்டியும், இரவு உணவும் ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனா்.




இதுகுறித்த செய்தி தினமணியில் வெளியானது. இதையறிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதன்கிழமை இரவு வந்து அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவா்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் திறன், ஆளுமைத் திறன், நற்பண்பு, தியானம், ஒழுக்கம், பிறருக்கு உதவுதல், அறிவாற்றல், துணிவு,நவீன விஞ்ஞானம் போன்ற தகவல்கள் அடங்கிய குறுந்தகடு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.




மேலும், அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 10 கணினிகள் வழங்கப்படுகின்றன. அரசு பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு புரியும்படியான பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிா்காலத்தில் எந்தப் போட்டித் தோ்வையும் எளிதாக சந்திக்கக் கூடிய ஆற்றல் படைத்தவா்களாக உருவாக்கப்பட்டு வருகின்றனா்.
மாணவா்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. அதேநேரத்தில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களிடம் கூடுதல் கவனம் செலுத்தி அவா்கள் கல்வித் திறன் படைத்தவா்களாக உருவாக ஊக்கப்படுத்துவோம் என்றாா்.




அப்போது, பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, பானு எம்.பழனிசாமி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவா்கள் சூ.தா்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.