சென்னை: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் கவுன்சலிங் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. அரசு, நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதற்கான பட்டியல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் கவுன்சலிங் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கவுன்சலிங் 9 மற்றும் 10ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நடக்கும்.
தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை1, ஆகிய பணியிடங்களுக்கு 9ம் தேதியும், கணக்கு, இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் பணியிடங்களுக்கு 10ம் தேதியும் கவுன்சலிங் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். தகுதியான முதுநிலை பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடக்க உள்ள கவுன்சலிங்கில் பங்கேற்று பணி நியமன ஆணைகள் பெற உரிய அத்தாட்சி சான்றுகளுடன் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பனம் தெரிவித்துள்ளார்.