![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/8c/e3/b6/8ce3b6a23c1a27ce084b19295135ad5d.jpg)
கோவை:பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் 2ம் தேதி துவங்கவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில், 34 ஆயிரத்து 909 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பயம், பதற்றமின்றி பொதுத்தேர்வு எழுத, உளவியல் ஆலோசகர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
தமிழகம் முழுக்க, மாநில கல்வித்திட்டம் பின்பற்றும் மாணவர்களுக்கு, வரும் 2ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது; 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. கோவை மாவட்டத்தில், 356 பள்ளிகளை சேர்ந்த, 34 ஆயிரத்து 286 பேர் எழுதுகின்றனர். 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 623 தனித்தேர்வர்களுக்கு, மூன்று மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இணை இயக்குனர் ராமசாமி தலைமையில், எந்த புகாருக்கும் இடமளிக்காத வகையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகள் நடக்கின்றன.
உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், ஏற்கனவே இரு பொதுத்தேர்வுகளை சந்தித்துள்ளனர். எனவே,பயம், பதற்றம் அடையவேண்டாம். விடைத்தாள் சமர்ப்பிக்கும் முன்பு, கேள்வி எண், பகுதி எண் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏராளமான உயர்கல்வி வாய்ப்புகள் இருப்பதால், தன்னம்பிக்கையுடன் தேர்வறைக்குள் நுழைபவர்களுக்கு, வெற்றி நிச்சயம்,'' என்றார்
No comments:
Post a Comment