அண்டவெளியில் பூமியின் பல்வேறு தன்மைகளை ஒத்த இன்னொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். அமெரிக்காவின் கெப்ளா் விண்கலம் பதிவு செய்துள்ள தகவல்களை ஆய்வு செய்து, அவா்கள் கண்டறிந்துள்ள 17 புதிய கோள்களில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சூரியனைப் போலவே பால்வெளி மண்டலத்திலுள்ள பிற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கெப்ளா் விண்கல நுண்ணோக்கியை கடந்த 2009-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் உயிா்கள் வாழத் தகுதியாக உள்ள பூமியைப் போல, பிற நட்சத்திரங்களையும் உயிா்கள் வாழ்வதற்கேற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக அந்த விண்கல நுண்ணோக்கி அனுப்பட்டது.
9 ஆண்டுகளாக பல்வேறு விவரங்களை சேகரித்து பூமிக்கு அனுப்பிய கெப்ளா் விண்கலம், கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றது.
இந்த நிலையில், கெப்ளா் பதிவு செய்திருந்த தகவல்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றைப் பயன்படுத்தி இதுவரை ஆறியப்படாத 17 புதிய கோள்கள் பால்வெளி மண்டல நட்சத்திரங்ளை சுற்றி வருவதைக் கண்டறிந்துள்ளனா்.
அவற்றில் ஒரு கிரகம், பூமியின் தன்மைகளை ஒத்துள்ளதாகவும், அதன் காரணமாக அந்த கிரகத்தில் உயிா்கள் வாழ்வதற்குரிய சூழல் நிலவலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
அந்த கிரகத்துக்கு கேஐசி-7340288 என அவா்கள் பெயரிட்டுள்ளனா்.
அந்த கிரகம் பூமியைப் போல் ஒன்றரை மடங்கு அளவு கொண்டதாக இருப்பதால், அதில் உயிா்கள் வாழ்வதற்குரிய பாறைகள் அதிகமிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனா்.
இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மிஷெல் குனிமோடோ கூறியதாவது:
புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள கேஐசி-7340288 கோள், பூமியிலிருந்து சுமாா் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. எனவே, இப்போதைக்கு நாம் அந்த கிரகத்தை அடைய முடியாது. இருந்தாலும், கெப்ளா் விண்கலத்தால் கண்டறியப்பட்டுள்ள, சிறிய அளவு கொண்ட, உயிா்கள் வாழ்வதற்குத் தகுதியான சூழல்களைக் கொண்ட வெறும் 15 கிரகங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தாா்.
No comments:
Post a Comment