Breaking

Monday, February 17, 2020

ஒரு ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்திய குறள் ஆசிரியை ஜெயமேரி.



விருது நகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப் பட்டியில் பணி புரியும் ஆசிரியை ஜெயமேரி, அங்கு படிக்கும் 130மாணவர்களுக்கும் தன் சொந்த செலவில் குறள் புத்தகங்கள் வாங்கித் தந்துள்ளார். குறளுக்கென உண்டியல்களும் வாங்கித் தந்து அதில் ஒரு குறள் சொல்லும் மாணவர்களுக்குஒரு ரூபாயும், குறளோடு பொருளும் சொல்லும் மாணவருக்கு 2 ரூபாயும் அவர்களது உண்டியலில் போட்டு வருகிறார்.




இவரின் இந்த ஊக்குவிக்கும் பணியால் அவர் பள்ளியில் அதிக குறள்கள் சொல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவரது இரண்டாம் வகுப்பு மாணவி கிருத்திகா ஹரினி இந்த குறள் உண்டியலில் காசுகள் சேரச் சேர, ஆர்வம் அதிகமாகி அதிக குறள்கள் படிக்க ஆரம்பித்தார்.அந்தக் குழந்தையின் ஆர்வத்தைக் கண்ட ஆசிரியை ஜெயமேரி சிறப்பு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.
மாணவி கிருத்திகா ஹரினி200 குறள்களை, 5.39 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை படைத்ததைப் பாராட்டி சிவகாசி அரிமா சங்கம் மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய் கல்வி வைப்பு நிதியாக அளித்துள்ளது.





ஒரு ரூபாய் உண்டியல் காசு இப்போது மாணவி ஹரினிக்கு ஒரு லட்சத்தைப் பெற்றுத் தந்துள்ளது.இதற்கு பின்னணியாகவும், ஏழை மாணவியின் வாழ்க்கைத் தரம் உயரக் காரணமாகவும் இருந்த ஆசிரியை ஜெயமேரியை கல்வியாளர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.