JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, March 4, 2020

பொது தேர்வு அறைகளில் மற்ற வகுப்புகள் நடத்த தடை


சென்னை : பொது தேர்வு எழுதும் வகுப்பறைகளில், மற்ற வகுப்புக்களை நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, 2ம் தேதி துவங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,012 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 8.35 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பள்ளிகளில், காற்றோட்டமான, விசாலமான வகுப்பறைகள் மட்டுமே, தேர்வு எழுதும் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை, தேர்வு மையத்தின் தலைமை கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.


அதனால், தேர்வு முடிந்த பின், யாரையும் அனுமதிக்காமல், அந்த வகுப்பறைகளை பூட்டி வைக்க, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தேர்வு அறைகளாக செயல்படும் வகுப்பறைகளில், மற்ற நேரங்களில் யாராவது புகுந்து, முறைகேடுகளுக்கு உதவக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, பொது தேர்வு எழுதாத, மற்ற வகுப்பு மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து, படித்து வருகின்றனர். நீண்ட நேரம் திறந்தவெளியில் அமர்ந்து படிப்பதால், குறிப்பாக மாணவியர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இம்மாணவர்களுக்கு வகுப்பு நடத்த, தற்காலிக கூடாரம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment