திருத்தணியில் அரசு பொதுத் தேர்வு எழுதச் சென்ற பிளஸ் 2 மாணவிகள், கைகளைக் கழுவிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதல் வகுப்பில் இருந்து 9-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வு வெள்ளிகிழமை நடந்தது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மாணவிகள் தங்கள் கைகளைக் கழுவிய பின்னரே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி அறிவுறுத்தியிருந்தாா்.
அதன்படி தேர்வு எழுத வந்த மாணவிகள் கை கழுவிய பின்னரே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை தேர்வு மையப் பொறுப்பாளா் செய்திருந்தாா்.
இதேபோல், திருத்தணியை அடுத்துள்ள புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவா்களும் சோப்பு போட்டு கைகளைக் கழுவிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
No comments:
Post a Comment