
சென்னை : 'முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் உரிமம் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்' என, சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், சென்னையில், தினமும் வெளியில் வருவோர் எண்ணிக்கை, அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த, சென்னை மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நடவடிக்கை : இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி, தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும், வெளியில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா வைரசை தடுக்க, சென்னை மாநக ராட்சி, பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ரூ.100 அபராதம் : அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் உள்ள மக்கள், வெளியில் வரும் போது, கொரோனா நோய் தொற்று சமூக பரவலை தவிர்க்க, கட்டாயம், முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.இந்த உத்தரவை மீறுவோர், குற்றம் செய்ததாக கருதப்பட்டு, அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வர். ஓட்டுனர் உரிமம் ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.முக கவசம் அணியாமல் வெளியில் வருவோருக்கு, ஒரு நாளைக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறைகள், உடனடியாக அமலுக்கு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment