Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 22, 2020

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்



பிரபஞ்சத்தில் நமக்கிருக்கும் ஒரே வீடு இந்த பூமி தான். இதையும் நாம் சேதப்படுத்திவிட்டால் வருங்கால சந்ததி மன்னிக்காது. இதை அனைவருக்கும் நினைவு படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.பூமியின் வெப்பநிலை இதே வேகத்தில் அதிகரித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடந்த நுாற்றாண்டில் மட்டும்உலகின் வெப்பம் 0.74 டிகிரி அளவுக்கு உயர்ந்துஉள்ளது. குளிர்காலத்தில் இயல்பைவிட 0.5 டிகிரி வெப்ப நிலை அதிகரித்தால் கோதுமை உற்பத்தி 17 சதவீதம் வரை பாதிக்கிறது. இதனால் நெற்பயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த வெப்பநிலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்பை விட துருவப்பகுதிகளில் இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. துருவப்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுகின்றன. இதனால் கடல்மட்டம் வெகுவாக உயரக்கூடும்.நமது பூமியை பள்ளிக் கூடங்களில் இருக்கும் உலக உருண்டை அளவு சிறியதாக கற்பனை செய்து கொண்டால், அதில் இரண்டு பூச்சு பெயின்ட் அளவுக்கே காற்றுமண்டலம் சூழ்ந்துள்ளது. பூமியின் அளவை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு. இது தான் நாம் உயிர் வாழ உதவுகிறது.
ஆபத்தான காஸ்மிக் கதிர்களிலிருந்து நம்மைகாப்பாற்றுகிறது. இது இல்லாவிட்டால் மழையின் வேகத்தை கூட நம்மால் தாங்க முடியாது. இதுஇப்போது சேதமடைந்து வருவது வேதனைக்குரியது.ஒரு லிட்டர் பெட்ரோல் எரிக்கப்படும் போது 4 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேறி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் பல வழிகளில் உதவ முடியும்.
சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான மின்சக்தியை காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் பெறலாம். மரங்கள் நடுவது, மரங்களை பாதுகாப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வைஏற்படுத்த வேண்டும். இப்போது பல தனியார் அமைப்புகளும், சேவை நிறுவனங்கள், ஆன்மிக குழுக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில்கவனம் செலுத்த தொடங்கியிருப்பதுவரவேற்கத்தக்க விஷயம்.

No comments:

Post a Comment