
அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது. * மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில் உறைந்திருப்பவளே! மதுர வல்லித் தாயே! உன்னைப் போற்றுகிறோம்.* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு அளிப்பவளே! உன் பாதமலரைச் சரணடைகிறோம். * அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே! அருள் நெஞ்சினர்உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் இல்லம் செழித்திருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வைத் தந்தருள்வாயாக.* பூங்கொடியாகத் திகழ்பவளே! அலமேலு மங்கைத்தாயே! மூவரும், தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே!
பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே! அஷ்டஐஸ்வர்யங்களையும்வாரி வழங்குவாயாக.* முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே!
தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயக்கமலத்தில் வாழ்பவளே! நிலவு போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனி கொண்டவளே!
குறையில்லாத வாழ்வு தரும் கோமளவல்லியே! செங்கமலத் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே!
வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரையை மலரை விரும்பி ஏற்றவளே! லோகமாதாவே! உன் அருளால் இந்த உலகமெல்லாம் செழித்தோங்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.



No comments:
Post a Comment