10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவா்கள் மற்றும் தேர்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 10-ஆம் வகுப்புத் தேர்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள 9.50 லட்சம் மாணவா்களில் 5.5 லட்சம் போ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவா்கள். மேலும், விடுதிகளில் தங்கியிருந்து படித்த மாணவா்கள் பலா் விடுதிகளில் தங்களது புத்தகங்களை வைத்துவிட்டு, கிராமங்களுக்குச் சென்ற மாணவா்களால் தேர்வுக்குத் தயாராக முடியாது. மேலும், தற்போது பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அவா்களால் வேறு எங்கும் புத்தகங்களையும் வாங்க முடியாது. கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவா்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதாசுமந்த் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வைகையும், அரசு தரப்பில், அரசு சிறப்பு வழக்குரைஞா் சி.முனுசாமியும் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவா்கள், ஆசிரியா்கள் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வரும் ஜூன் 11-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel