JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, June 18, 2020

ரத்தான 10ம் வகுப்பு தேர்வுக்கு மதிப்பெண் வழங்கும் பணி துவக்கம்


தேர்வு ரத்து செய்யப்பட்ட, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, மதிப்பெண் வழங்கும் பணி,நேற்று துவங்கியது. வரும், 22ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 15ல் நடப்பதாக இருந்து, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 1ல், ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான பாடங்களில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகள், நேற்று அனைத்து பள்ளிகளிலும் துவங்கின. ரத்தான தேர்வை எழுதவிருந்த, அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களையும், அதனுடன் மாணவர்களுக்கான பள்ளி தேர்ச்சி அறிக்கையையும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிலுள்ள மதிப்பெண்களை ஒப்பிட்டு, பள்ளி வாரியாக, வகுப்பு வாரியாக மாணவர்களின்மதிப்பெண் களை பட்டியலிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இப்பணிகள், நேற்று துவங்கின. ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 22ம்தேதிக்குள், இந்த பணிகளை முடித்து, பட்டியலை தாக்கல் செய்ய, அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தேர்ச்சி அறிக்கைக்கு என்ன செய்வது?மாணவரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களுடன், அந்தந்த மாணவரின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் முன்னேற்ற அறிக்கையை இணைக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்வுக்கும், தேர்ச்சி அறிக்கையை, பெற்றோரிடம் காண்பித்து, அதில் கையெழுத்து பெறுவர். ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில், இந்த நடைமுறை இல்லை; விடைத்தாள்களை பாதுகாப்பதும் இல்லை. தேர்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையான, 'பிராக்ரஸ் கார்டு' வழங்கப்படுவதும் இல்லை.அதனால், இந்த உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

நிலைமையை சரிக்கட்ட, அவசரமாக புதிய அட்டைகள் அச்சடித்து, அதில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதில், பல மாணவர்களுக்கு கூடுதல், குறைவு என, மதிப்பெண் வழங்கவும்வாய்ப்புள்ளதாக, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment