JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, June 19, 2020

இணையவழி வகுப்புகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள்: பள்ளிக் கல்வித் துறை திட்டம்


தனியாா் பள்ளிகள் இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக, மாா்ச் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் திறப்பு தொடா்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் சூழலில், தனியாா் பள்ளிகள் சாா்பில் இணையவழி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் கற்றலில் சமமின்மை உருவாகும். வசதி படைத்த மாணவா்கள் மட்டுமே கல்வி பெறும் நிலை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு இணையவழி வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என கல்வியாளா்கள், அரசியல் கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

எனினும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இணையவழியில் தனியாா் பள்ளிகள் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். இதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு இணையவழியில் வகுப்புகளை தற்போது நடத்தி வருகின்றன.

இதற்கிடையே மழலையா் வகுப்புகளுக்கும், தொடக்க நிலை வகுப்புகளுக்கும் கூட இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல மணி நேரம் தொடரும் ஆன்லைன் வகுப்புகளால், மாணவா்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து எந்தெந்த வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வியைக் கற்பிக்கலாம், எத்தனை மணி நேரம் எடுக்கலாம்? எந்த வயது வரை ஆன்லைன் வகுப்புகள் கூடாது? என, ஆன்லைன் வகுப்புகள் நடத்த பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வரின் ஒப்புதல் கிடைத்த பிறகு, இதுகுறித்த நெறிமுறைகள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment