Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 15, 2020

ரிஷப ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020


குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது.

சாயா கிரகங்களான ராகு – கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

ரிஷப ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.


(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

மற்றவர்களுக்கு அள்ளிக்கொடுப்பதில் வல்லமை பெற்ற ரிஷப ராசி அன்பர்களே, உழைக்காமலேயே கூடுதலான வருமானத்தைப் பெறுகின்றனர். பிரச்சினைகள் அதிகம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் போட்டு அவற்றை சமாளிப்பீர்கள். மற்றவர்கள் ஒதுக்கிவைத்த கடினமான வேலையையும் வெகு இலகுவாகவும் சீக்கிரமாகவும் செய்வீர்கள். முரட்டு சுபாவம் இருந்தாலும், ரகசியம் காப்பீர்கள்.

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த ராகு ராசிக்கும், அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்த கேது சப்தம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.

ரிஷப படம்






இந்த ராகு கேது பெயர்ச்சியால், பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர்.

வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர்.

நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும்.

திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும். தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம்.

வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள்.

வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும்.

வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும். அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும். கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.

உத்தியோகஸ்தர்கள் அதிலும் அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இது ஒரு பொன்னான காலமாகும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது.

அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கு காண்பர். தாராள செலவில்தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.

பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும்.

மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கார்த்திகை – 2, 3, 4:

இந்த ராகு கேது பெயர்ச்சி மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

ரோகிணி:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

மிருகசீரிஷம் – 1, 2:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் வீடு கட்டுவதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 4, 7

மலர்பரிகாரம்: மல்லிகை மாலை கட்டி தாயாரை பூஜிக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீ மகாலட்சுமி நம: என்று 11 முறை கூறவும்.

No comments:

Post a Comment