Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 19, 2020

ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை விடியோ பதிவு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை விடியோ பதிவு செய்ய தகுந்த ஆசிரியா்களைத் தோவு செய்து, பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

பள்ளிக் கல்வித் துறையில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக ஏற்கெனவே பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான விடியோ படப் பதிவு மேற்கொள்ளப்பட்டு, மின் பாடப் பொருளாக மாற்றப்பட்டு, பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து பிளஸ் 1 வகுப்பு அனைத்து பாடங்களுக்கான விடியோ பதிவு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடப் பொருள்களுக்கான விடியோ படப் பதிவும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்யுமாறு, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும் குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்துதல் வேண்டும். இதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைத்து, பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment