Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 4, 2020

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு



மதுரை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணிபுரிகிறார். இவரது பெயர் 2019 ஆண்டுக்கான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி வேதநாயகி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இவரைப்போல் பெண் அரசு ஊழியர்களும் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் பிரிவு 12-ல் விடுமுறை பதவி உயர்வுக்கு தடையாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதை பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன் பிறகும் மனுதாரர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்றார். இதையடுத்து நீதிபதிகள், பணிக்காலத்தில் தான் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment