Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 21, 2020

தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்படி ரேஷன் பொருள் வாங்க கடைக்கு சென்றால், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை, கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்வார். அதன்பின்னர் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும். பொருட்கள் வாங்கியவுடன், நுகர்வோர் ஏற்கனவே அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். இதுவே இப்போது உள்ள நடைமுறை. இந்த நடைமுறைப்படி குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. எனினும் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் மற்றும் குடும்ப உறுப்பினர் உள்பட யார் வந்து கார்டை காட்டினாலும் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

இதுபோன்ற நடைமுறைகளால் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதனால், பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், பயோமெட்ரிக் திட்டம் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் நடைமுறை, பரீட்சார்த்த முறையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் கரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும், பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குடும்ப அட்டையில் உள்ள நபர்களை, தவிர மற்ற நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்ட பின்னரே, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment