திரிபுரா மாநிலத்தில், ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடியாத தொலை தூரப் பகுதிகளில், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கல்வி நிலையங்களை திறக்க இயலாத நிலை நீடிக்கிறது. இதனால் செல்போன்கள் மற்றும் மாநில அரசின் கேபிள் டிவி நெட்வொர்க்குகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திரிபுராவில், மாநில கல்வித் துறை சமீபத்தில் நடத்திய ஆய்வில், பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில், செல்போன்கள் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அப்படிப்பட்ட பகுதிகளில் வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வகுப்புகள் வரும் 20-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி, பள்ளிகளுக்கு அருகிலுள்ள திறந்தவெளிகளில் வகுப்புகள் நடத்தப்படும். 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில் சமூக இடைவெளியுடன் வகுப்புகள் இயங்கும். 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கை கழுவுவதற்கு சோப்புகள் மற்றும் தண்ணீரை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் அல்லது இருமலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment