JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 22, 2020

தமிழகத்தில் அரசு சிறப்புப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் காது கேளாதோர், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் உள்ளன. இதில் 22 சிறப்புப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளைத் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

அரசு சிறப்புப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், இசை ஆசிரியர்கள், இரவுக் காவலர், துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்ப உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. பின்னர் மனு தொடர்பாகத் தமிழக மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment