Breaking

Monday, September 7, 2020

மொபைலில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகள்... மீட்டெடுப்பது எப்படி...?


வீதிகளில் விளையாடி மகிழ வேண்டிய குழந்தைகள் தற்பொழுது மொபைல் போன், டிவி போன்ற தொழில்நுட்ப சாதனங்களில் மூழ்கி கிடக்கின்றனர் என வருத்தப்படும் பொற்றோர் எண்ணிலடங்காதோர். 

இதற்கு காரணம் என்ன? அதிலிருந்து மீட்டெடுப்பது எப்படி?

மொபைல் போன், டிவி ஆகிய தொழில்நுட்ப சாதனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன் குழந்தைகள் தெருக்களில் ஒன்று கூடி, ஆடிப்பாடி விளையாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

குழந்தைகள் விளையாடுவதற்கென பிரத்யேகமாக கண்ணாம் மூச்சி, நொண்டி, பம்பரம், பாண்டி, கோலி என வகைப்படுத்தி விளையாடி மகிழ்ந்தனர்.

பொழுதுபோக்கையும் தாண்டி இது போன்ற விளையாட்டுகள் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமானதாக அமைந்தது. ஆனால் தற்போது இதுபோன்ற விளையாட்டுகள் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே?

இன்றைய குழந்தைகளின் நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. எதிர்வீட்டில் இருக்கும் குழந்தைகள் யார் என்பது கூட தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற தமிழர்களின் விளையாட்டுகளை டிவியில் பார்த்து தெரிந்துகொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இன்றைய தலைமுறை குழந்தைகள் என்பது வேதனையே.

பெற்றோர் சமையல் அறையிலோ அல்லது வேறு வேலையில் இருக்கும் போதோ, குழந்தைகள் கையில் மொபைல் போனை கொடுத்து பழக்கிவிடுகிறார்கள்.

மொபைல் போன், டிவி உள்ளிட்ட சாதனங்களிலிருந்து குழந்தைகளை மீட்டு வரவேண்டும் எனில் அவர்களுடன் பெற்றோர் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

சமீபத்தில் சென்னையில் 'மழலையே மனம் திற' என்ற தலைப்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு வந்திருந்த குழந்தைகளின் ஆர்வம், பெற்றோர்தான் குழந்தைகளை தொழில்நுட்ப சாதனங்களில் மூழ்கடித்துவிட்டார்கள் என்பதற்கு சாட்சியாக அமைந்தது.

இதுபோன்ற விளையாட்டுகளை மறந்ததன் எதிரொலிதான் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் அதிகப்படியான தற்கொலைகள் நிகழ்கின்றது.

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோரே ஒரு நிமிடம் நின்று யோசித்து பாருங்கள் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது புரியும்.

No comments:

Post a Comment