Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 18, 2020

ஆங்கிலத்துக்குப் புதிய பாடநூல்: அடுத்த சர்ச்சை.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கருத்துகளைத் தமிழகக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் வரவேற்றிருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை அது எட்ட வேண்டிய இலக்குகளில் ஒன்றாகக் குறிப்பிடுவது 1:26 ஆசிரியர் - மாணவர் விகிதம். ஆனால், தமிழகத்திலோ ஏற்கனெவே 1:17 என்ற மேம்பட்ட நிலை நிலவுகிறது. இதேபோல, இன்னோர் இலக்காக அது குறிப்பிடும் நிகரச் சேர்க்கை விகிதமான 50% என்பதும் தமிழகத்தில் நடப்பாண்டிலேயே எட்டப்பட்டுவிடும் என்று புள்ளிவிவரங்களோடு தெரிவித்துள்ளார் அமைச்சர்.

கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இருமொழிக் கொள்கை தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பழகன். முதல்வர் பழனிசாமியும் இதை உறுதிப்படுத்துகிறார். தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரும் நீண்ட நெடியதொரு அரசியல் உரிமைப் போராட்டத்தில் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக மட்டுமின்றி, பாடங்களில் ஒன்றாகவும் பயிற்றுமொழியாகவும் தமிழகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனினும், இந்திக்குப் பதிலாகத்தான் ஆங்கிலம் முன்னிறுத்தப்படுகிறதே அன்றி, தமிழுக்கு மாற்றாக அல்ல. இந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில், அவர் சார்ந்த துறையோ தமிழைவிட ஆங்கிலத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளில் முனைப்பாக இறங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தில் இரண்டாவது மொழித்தாளாக ஆங்கிலம் இருந்துவந்த நிலையில், தற்போது ஆங்கிலத்துக்குப் பதிலாக ஆங்கில மொழித் தொடர்பு என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இளநிலைப் படிப்பு மாணவர்கள் தங்களது பாடங்களில் நான்காவது பகுதியாக விருப்பப் பாடங்களைப் படித்து வந்த நிலையில், அந்தப் பாடங்களுக்கு மாற்றாகத் தொடர்புடைய துறை சார்ந்த ஆங்கிலப் பாடம் ஒன்று கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றோடு இணைந்த அனைத்துக் கல்லூரிகளுக்கும் இளநிலைப் படிப்பு மாணவர்களுக்கு ஒரே ஆங்கிலப் பாடநூலைப் பரிந்துரைத்திருப்பதோடு, அதை நடப்பாண்டிலேயே பின்பற்றவும் உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு மாநில உயர் கல்வித் துறை கவுன்சில்.

கல்லூரி மாணவர்கள் தற்போதைய காலகட்டத்தின் உலகளாவிய வேலைவாய்ப்புத் தேவைகளுக்கேற்ப ஆங்கிலத்தில் மொழித் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது, புதிய தேசிய கல்விக் கொள்கை. அதை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே தமிழ்நாட்டு உயர் கல்வித் துறை முந்திக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த நடைமுறை இன்னொரு வகையில் புதிய கொள்கைக்கு எதிராகவும்கூட இருக்கிறது. கல்லூரிகள் ஒவ்வொன்றும் தன்னாட்சி பெற்றவையாக இயங்க வேண்டும் என்று விரும்புகிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், தமிழக உயர் கல்வித் துறையின் முடிவோ பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கம் இரண்டிலும் கல்லூரிகளை மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியையும்கூட கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

தனியாரின் கையில் அதிகாரம்

தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உயர் கல்வி ஆணையம், பல்கலைக்கழகப் மானியக் குழுவின் விதிமுறைகளைப் பல்கலைக்கழகங்களும் அரசுக் கல்லூரிகளும் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்று கண்காணிக்கும் அமைப்பாகவே செயல்பட்டுவந்தது. ஆனால், தற்போது அரசு - தனியார் கூட்டு உடன்படிக்கைகளின்படி மத்திய அரசோடும் தனியார் அமைப்புகளோடும் சேர்ந்து பாடநூல் உருவாக்கத்திலும் அது ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. அதாவது, ஆணையத்தின் சார்பாகத் தனியார் அமைப்புகளே பாடநூலை உருவாக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment