தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், காணொலி காட்சியில், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
செயலாளர் அருள்செல்வன், மகளிர் அணி செயலாளர்கள் ரேணுகாதேவி, புரட்சிமணி ஆகியோர் பேசினர். நிறுவனத் தலைவர் மாயவன், கோரிக்கை குறித்து விளக்கினார். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்குபெற்று, பணியிடை நீக்கம், 17பி குறிப்பாணையை உடனடியாக நீக்கி, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில், பொது மாறுதல் கலந்தாய்வை, உடனடியாக ஒளிவு மறைவு இன்றி நடத்த வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 40 வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும். மேல்நிலைக்கல்வி பொது தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு வழங்கும் உழைப்பு ஊதியத்திற்கு சமமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கும் உழைப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Dailyhunt
No comments:
Post a Comment