Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 20, 2020

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: முதல் சுற்று கலந்தாய்வில் குறைந்த இடங்களே நிரம்பின

தமிழக பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றதால், மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியானது. இந்நிலையில், கலந்தாய்வின் முதல் சுற்று முழுமையாக நிறைவடைந்த நிலையில், அதில் மிக குறைவான இடங்களே நிரம்பியது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு அக். 8-ம் தேதி தொடங்கியது. அதில், தரவரிசைப்படி 12,263 மாணவர்கள் கலந்துகொள்ள இருந்தனர். ஆனால், 10 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே முதல் சுற்றுகலந்தாய்வில் கலந்து கொண்டனர். அதிலும், 7,510 மாணவர்களே தங்களுக்கான கல்லூரியை தேர்வுசெய்து சேர்ந்துள்ளனர். இதனால், முதல் சுற்றுக்கு ஒதுக்கப்பட்டதில் 4,753 இடங்கள் நிரம்பவில்லை. இதேபோல், 2-வது சுற்றிலும் மிக குறைந்த அளவிலான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2-வது சுற்றில் கல்லூரியைத் தேர்வு செய்த மாணவர்களின் விவரம் அக். 20-ல் (இன்று) வெளியிடப்படும்.

அதேபோல், 3-வது சுற்றில் பங்கேற்ற மாணவர்கள் அக்.20, 21 ஆகிய தேதிகளில் விருப்பமான கல்லூரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் 22,23 ஆகிய தேதிகளில் இறுதி முடிவு எடுத்து ஏதேனும் ஒரு கல்லூரியைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment