Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 16, 2020

விருச்சிக ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

பரபரப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர்பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!
எல்லோரிடமும் அன்பாக இருக்கும் நீங்கள் உங்களை யாரேனும் துரோகம் நினைத்துவிட்டால் பழிக்குபழி வாங்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சுமாரான பலனையே தரும் என்றாலும், மற்ற கிரகங்கலால் கிடைக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. 

குரு பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகிஇருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும்.

வணிகம் நல்ல லாபத்தைக் கொடுத்து இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மனநிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள்.சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். வீடு,மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.

தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது ஜோதிட வாக்கு. அதாவது துரியோதனனின் ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும் போது அவனது படை தோல்வி அடைந்தது என்பதாகும். அந்த அளவுக்கு மோசமான பலன்கள் உங்களுக்கு நடக்குமோ என்ற அஞ்சவேண்டாம். ஏனெனில் அந்த சூழ்நிலை வேறு, இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்காது.

உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடிநன்மை உண்டு.

எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். அவர் 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இதுவும் சுமாரான இடம். பிறகு 2021 நவம்பர் 13-ந்தேதி அன்று முழு பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான கும்பராசிக்கு மாறுகிறார்.

இது சிறப்பான இடம் இல்லை. குரு மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்.அதன் பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மற்றகிரகங்களின் நிலை சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார்.

ஆனால் அவரது 10-ம் இடத்துப்பார்வை மூலம் பொன்,பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிகஉறுதுணையாக இருப்பர். இந்தநிலையில் சனிபகவான் 2020 டிசம்பர் 26-ந் தேதி அன்று மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

இது உன்னத நிலை.ஏழரைசனியின் பிடியில் இருந்து பூரணமாக விடுபட்டு விட்டீர்கள். அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார்.

இப்போது ராகு 7-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம்அல்ல. இடப்பெயர்ச்சியையும், தீயோர் சேர்க்கையால் அவப் பெயரையும் சந்திக்க நேரலாம். கேதுஇப்போது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் காரிய தடையையும், உடல் உபாதையையும் தரலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.

காரணம் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.

இனி விரிவான பலனை காணலாம். குரு பொருள்நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். ஆனால் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் மதிப்பு,மரியாதை இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும். குரு சாதகமாக இல்லை என்பதனால் சிற்சில தடைகள் வரத்தான் செய்யும்.
அதை டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு சனிபகவானால் சாமர்த்தி -யமாக முறியடிப்பீர்கள். அவரால் அனுகூலம் ஏற்படும்.

பணவிரயம் மறைந்து பொருளாதார வளம் பெருகும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது உத்தியோகம் பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். 

கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.ஆனால் குருவின் பார்வையால் முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும்.

மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரம் புதியவியாபாரம் தொடங்குவதோ,அதிகமுதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பணவிரையம் ஏற்படலாம். சிக்கனம் தேவை. தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் அதிபர்கள் சிலர் பண இழப்பை சந்திக்க நேரலாம். 

கவனம் தேவை. டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும் பொதுநல சேவகர்கள் சிறப்படைவர்.அரசியல்வாதிகள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு.

முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள். மாணவர்களுக்கு சற்று தொய்வு ஏற்படலாம். சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிக கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட வேண்டும்.. விவசாயம். வருமானத்திற்கு குறை இருக்காது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிகஅக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.

புதிய சொத்து வாங்கு -வதற்கான அனுகூலம்இல்லை. வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும். குருவின் பார்வையால் தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.சகோதரிகளால் நற்சுகம் கிடைக்கும். 

வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை வரைஅக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். உடல்நலம் சுமாராக இருக்கும்.

பரிகாரம்: குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத் தையும், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

No comments:

Post a Comment