JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, November 21, 2020

சேதமடைந்திருந்த அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக புனரமைத்த முன்னாள் மாணவர்!

ராமநாதபுரம் அருகே சேதமடைந்த நிலையில் இருந்த அரசு பள்ளியை, கொரோனோ காலத்திலும், தனியார் பள்ளிக்கு நிகராக புனரமைத்து கொடுத்த இளைஞருக்கு, ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது, குண்டத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்பு செய்யாமல் கட்டிடம் சீர்குலைந்து காணப்பட்டது. 

இதையறிந்த இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருபவருமான விக்னேஷ் குமார், இந்தப் பள்ளிக்கூடத்தை மூடுவதை தவிர்த்து, அதற்கு தேவையான அனைத்து கட்டுமானப் பணிகளை சொந்த செலவில் செய்து கொடுத்துள்ளார். 

மேலும், புதிய இருக்கைகள், குடிநீர் வசதி, பெயின்ட் அடித்தல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும், செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி, பள்ளியை புனரமைத்து தந்தவருக்கு, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விக்னேஷ் குமார் கூறுகையில், தன்னை போன்ற அரசுப் பள்ளியில் படித்தவர்கள், தங்களின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாலே, அனைத்து அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஏற்றம் பெறும், என நம்பிக்கை தெரிவித்தார். 

இப்பள்ளிக்கு தங்களின் சொந்த அறக்கட்டளை மூலம், கணவர் உதவி செய்தது, மிகுந்த மனநிறைவை தருவதாக அவரது மனைவி பாவனா மகிழ்ச்சி தெரிவித்தார். இதையடுத்து, சமூக ஆர்வலர்களும் குண்டத்தூர் ஊர் மக்களும் விக்னேஷ்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும், குண்டத்தூர் கிராமத்தையே தத்தெடுத்து இங்கு விவசாயம், நீர்நிலைகள் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார் விக்னேஷ் குமார்.

No comments:

Post a Comment