Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 10, 2020

ஒரு வாரத்துக்குள் மாணவர்களுக்கு நிலுவை உதவித்தொகை: யுஜிசி முடிவு

ஒருவார காலத்துக்குள் மாணவர்களுக்கு நிலுவை உதவித்தொகை வழங்கப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறும் ஆராய்ச்சிப் பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையைக் கடந்த டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உயர்த்தியது. இதில் இளநிலை ஆய்வாளருக்கு (ஜேஆர்எப்) ரூ.24,800-ல் இருந்து ரூ.31 ஆயிரமாகவும், முதுநிலை ஆய்வாளருக்கு (எஸ்ஆர்எப்) ரூ.27,900-ல் இருந்து ரூ.35 ஆயிரமாகவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு தனிநபருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கிடையே 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நெட் தேர்வில் உதவிப் பேராசிரியர் பணிக்கு 51 ஆயிரம் பேர் தேர்வாகினர். ஜேஆர்எப் உதவித்தொகைக்கு 4,756 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எனினும் கரோனா காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின், ''உதவித்தொகை தாமதமாகக் காரணமாக இருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே அளிக்கப்படாமல் இருந்த உதவித்தொகையுடன் சேர்த்து இந்த மாதத்துக்கான உதவித்தொகையும் வழங்கப்படும். இத்தொகை ஒருவார காலத்துக்குள்ளாக சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment