இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலின்டர் பெறும் வாடிக்கையாளர்களாக தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால் அந்நிறுவனத்தின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. அதேநேரத்தில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முன்பதிவு செய்த 3 நாட்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு எரிவாயு சிலிண்டர் மட்டுமே வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவை தீர்ந்ததும் முன்பதிவு செய்து புதிய சிலிண்டர் வரும் வரை சிரமப்படுகிறார்கள். இது குறித்து பல்வேறு தரப்பினரும் நிறுவனத்தில் முறையிட்டனர்.
இந்நிலையில் தற்போது இவர்களுக்காக முன்பதிவு செய்த உடனே சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்ய 'தட்கல்' முறையை அமல்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 'தட்கல்' முறையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த நாளிலேயே அவர்களின் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும்.
குறிப்பாக 'தட்கல் எல்.பி.ஜி. சேவா' மூலம் முன்பதிவு செய்த அரைமணி நேரத்தில் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வந்துவிடும். ஆனால் தட்கல் முறையில் சிலிண்டர் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கான இந்த புதிய தட்கல் முறை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






No comments:
Post a Comment