Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 28, 2021

அரசு பள்ளி மாணவர்களும் சம வாய்ப்பு பெறவே 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு

அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் சம வாய்ப்புகிடைக்க வேண்டுமென்பதற்காகவே 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தனியார்பள்ளி மாணவர்களும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப்போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கிறிஸ்துவ சங்கம் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு நடந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ''மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும் சேர ஏதுவாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு 10 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. அதனடிப்படையிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு சட்டமியற்றப்பட்டது.

அதற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. உள்இட ஒதுக்கீடு காரணமாக நடப்புகல்வியாண்டில் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்த சட்டம் இயற்ற அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் இதுவரை 700-க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கவில்லை. எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இந்த சட்டம்இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் விதிமீறல்கள் இல்லை எனும்போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மனுதாரர்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால் இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அதேநேரம் புதுச்சேரி அரசு அறிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்திய அரசு இதுபோன்ற இட ஒதுக்கீடுகள் நீட் தேர்வின் நோக்கத்தை சீரழித்துவிடும் என தெரிவித்திருப்பதை மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்

No comments:

Post a Comment