ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த நான்கு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள் பிப். 7ல் விண்ணில் பாய்கிறது.அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் சிறு அளவிலான செயற்கைகோள் தயாரித்து விண்ணில் செலுத்தும் திட்டம் கடந்தாண்டு துவக்கப்பட்டது.
இதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர், வளர்புரம், குருவராஜப்பாளையம், பனப்பாக்கம் ஆகிய கிராமப்புற அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்த 40 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைவருக்கும் ஆன்லைனில் செயற்கைகோள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நான்கு சிறிய செயற்கைகோள்களை உருவாக்கினர். இதுபோன்று பல பள்ளிகளில் தயாரிக்கப்பட்ட 100 செயற்கைகோள் வரும் ௭ம் தேதி தேதி காலை 10:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து ராட்சத பலுான் மூலம் விண்ணில் செலுத்த உள்ளனர்.
இது குறித்து திருமால்பூர் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் சதீஷ்குமார் கூறியதாவது:
ராட்சத பலுான் மூலம் எடுத்துச் செல்லப்படும் இந்த செயற்கைகோள்கள் எட்டு மணி நேரம் 38 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறந்து ஓசோன் படலத்தை அடைந்ததும் வெடிக்கும். அப்போது பலுானில் கட்டப்பட்டுள்ள 100 செயற்கைகோள்கள் பாராசூட் மூலம் மீண்டும் பூமியை வந்தடையும். செயற்கைகோள்களில் சேகரிக்கப்படும் பூமியின் தட்பவெப்ப நிலை கதிர் வீச்சு ஓசோன் படலம் குறித்த தகவல் கணினி வழியாக பதிவாகிவிடும். இது மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment