Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 19, 2021

ஆன்லைன் மூலம் கல்லூரி, பல்கலை தேர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 

9 மாதங்களுக்கு பிறகு, ஜனவரி மாதம் தான் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9, 10 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுத் தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. 

ஆனால், கொரோனா பரவல் அதிகமானதால், 10ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வுகளை அரசு ரத்து செய்தது. ஆனால் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவையின் தேர்தலை அடுத்து வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்க இருப்பதால், மே 3ம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் 2 தேர்வின் மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்தான் கொரோனா தொற்று மேலும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. அதனால், பிளஸ் 2 தேர்வையும் ஜூலை மாதம் நடத்தலாம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

இருப்பினும் பாதுகாப்புடன் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியது. 24ம் தேதியுடன் செய்முறைத் தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வை தேதி குறிப்பிடாமல் அரசு ஒத்தி வைத்து அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நேற்று அதிரடியாக மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. அதில் சிலவற்றுக்கு விதிவிலக்குகளை அறிவித்து இருந்தாலும், பிளஸ் 2 தேர்வை நடத்துவதில் உள்ள சிரமம் கருதி ஒத்தி வைத்துள்ளது.

அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

* கல்லூரி பல்கலைக் கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியில் வகுப்புகள் நடத்த வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

* கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுகிறது.

* கோடைகால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment