Breaking

Thursday, April 22, 2021

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பள்ளிகளே திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்

வாங்க ஆர்வமில்லாததால் தேங்கிக்கிடக்கின்றன

பயன் இல்லாத திட்டம் என கல்வியாளர்கள் வேதனை

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் மட்டும் விநியோகம் செய்வதால் எந்தவித பயனும் இல்லை என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவ தொடங்கிய நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதன்பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. அதேசமயம், ஒவ்வொரு பருவத்திற்கும் மாணவர்களை, பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கான புத்தகங்கள் மட்டும் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், பாடங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டு, கல்வி தொலைக்காட்சி உள்பட சில சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. இதுதவிர, தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகள் நடத்தப்பட்டன. அதுவும் தற்போது பிளஸ்2 வகுப்பு மட்டும் செய்முறை தேர்வுக்காக நடத்தப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல்-மே மாதங்களில் ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்படும். தற்ேபாது கொரோனா 2வது அலையாக வேகமாக பரவி வரும் நிலையில், அதற்காக சாத்தியக்கூறு இல்லை என்பதால், கடந்த ஆண்டை போலவே, நடப்பாண்டும் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கல்வியாண்டே நிறைவடைந்த நிலையில் தற்போது, மாணவர்களுக்கான பாடப்பயிற்சி கட்டகம் (தேர்வுக்கான வினா வங்கி) மற்றும் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயன் ஏதும் இல்லை என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: கொரோனாவின் கோரத்தால் தொழில்கள் மட்டுமின்றி, கல்வியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால், பெரும்பாலான மாணவர்கள், கல்வி செயல்பாடுகளை முற்றிலுமாக மறந்து விட்டனர். தனியார் பள்ளிகளுக்காவது ஆன்லைன் மூலம் வகுப்பு நடந்து வருகிறது. இதனால், ஓரளவு பாடம் பற்றிய தொடர்பு கிடைக்கப்பெற்றிருக்கும். ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி தான்.

ஏற்கனவே பருவம் தவறாமல் பாடப்புத்தங்களை வழங்கியதுடன், வீடியோ மூலமாக பாடங்களை ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 90 சதவீதம் பேர் அதனை பார்த்து பயனடைந்ததாக தெரியவில்லை. தற்ேபாது, 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3ம் பருவத்திற்கான பாட புத்தகம், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகம் ஆகியவை காணொலி வடிவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை, கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதுடன், மாணவர்களை பார்க்க வைக்க தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மாணவர்கள் பலர், தங்களது பெற்றோருடன் சேர்ந்து பல்வேறு சிறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர்.இதனால் புத்தகங்களை வாங்கக் கூட, அவர்கள் பள்ளிக்கு வர இயலாத நிலை உள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், மாணவர்கள் வாங்க வராததால் புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளிலேயே தேங்கி கிடக்கிறது.

ஏற்கனவே, வழங்கப்பட்ட பாடப்புத்தகம் மற்றும் வீடியோ பாடங்களை, மாணவர்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளாத நிலையில், தற்போதைய புதிய வீடியோ மற்றும் பயிற்சி கட்டகம் எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி தான். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடிக்கணக்கில் செலவு செய்து பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கினாலும், அதற்கான பலன் இல்லாமல் போவது தான் வேதனையானது. இந்த செலவில் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலாவது, உபயோகமானதாக இருக்கும். இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment