Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 23, 2021

+2 தேர்வு நடத்தப்படும், நீட் தேர்வு நடத்த மாட்டோம் - மத்திய கல்வித்துறை அமைச்சர் கூட்டத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் தகவல்!

தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். 

அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி வாயிலாக இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். 

இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகித்தார். தமிழகத்தின் சார்பில் மாநில உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தொழில்முறைக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாய அடிப்படை என்பதால் அந்த தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்பதால், அதைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 

மேலும், சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் 12ம் வகுப்புக்கு தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரியுள்ளனர். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் +2 தேர்வு தொடர்பாக மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள், அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள்; தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும். கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். 

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு தொடர்பாகவே முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி செவ்வாய்கிழமைக்குள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். ஜேஇஇ, இசிஆர் நுழைவுத் தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது எனவும் கூறினார்.

No comments:

Post a Comment