JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, May 20, 2021

கல்வித்துறையில் ஊழல் தடுக்கும் புதிய சீர்திருத்த முறை

பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் குவிந்துள்ள அதிகாரங்களை, கமிஷனர் பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கி, மேற்கொள்ளப் பட்ட புதிய சீர்திருத்த முறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில், புதிய அரசு பொறுப்பேற்றதும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அதிகாரத்தை குறைக்கும் வகையில், கமிஷனர் பணியிடம் உருவாக்கி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு, ஆசிரியர்கள் சங்கத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பினாலும், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.குறிப்பாக, குரூப் 1 தேர்வெழுதி, மாவட்ட கல்வி அலுவலராக நேரடியாக நியமனம் செய்யப்படுபவரே, முதன்மை கல்வி அலுவலர், இணை இயக்குனர்களாக பணிப்புரிந்த பின், இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இயக்குனருக்கு நிர்வாக ரீதியிலான அனுபவம் உள்ளதால் இப் பணியிடத்தின் அதிகாரங்களை, கமிஷனருக்கு வழங்க கூடாது என்பதே, ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.ஆனால், இந்நடைமுறை தான், ஊழலுக்கு துணை நிற்பதாகவும், எவ்வித அதிரடி முடிவுகளும் எடுக்க முடியாத நிலைக்கு, சில நேர்மையான அதிகாரிகள் தள்ளப்படுவதாகவும் கருத்து எழுந்துள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில்,'மாவட்ட அளவில் முறையாக பணிபுரியாத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், சில சங்க உறுப்பினர்கள், மேலதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.கமிஷனர் பணியிடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. கமிஷனர் பதவியில் உள்ள அதிகாரி, இயக்குனர், இணை இயக்குனர்களுடன் மட்டுமல்லாமல், முதன்மை கல்வி அலுவலர்களுடனும், ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.ஒளிவுமறைவற்ற நிர்வாகம் இருந்தால் தான், பள்ளிக்கல்வித் துறைக்காக ஒதுக்கப்படும், பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட், முறையாக செல வழிக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment