Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

தனியார் மருத்துவமனைகள் வாயிலாக நாளை முதல் ரெம்டெசிவிர் சப்ளை

தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவ மனைகள் வாயிலாகவே, 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்குவதை நாளை முதல் செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா தொற்றால் மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்தை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கடும் நெரிசல்

மருந்து சீட்டுடன் மக்கள் அல்லாடிய நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், இம்மருந்து விற்பனையை அரசு துவக்கியது.மற்ற மாவட்ட மக்கள் சென்னை வந்து அலைவதை தடுக்க, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி நகரங்களிலும், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவக்கப்பட்டது. இருப்பினும், மருந்து விற்பனை நிலையங்களில் ஏராளமானோர் குவிந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது; நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதற்கு தீர்வு காண்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் வழியே போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் வழியாகவும், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள விற்பனை மையங்களில், நோயாளி களின் குடும்பத்தினர் வழியாகவும் இந்த மருந்து வழங்கப்படுகிறது.

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே, இவ்வாறு நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினருக்கு மருந்து வழங்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படும் இடங்களில் அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது; இதை தவிர்க்க வேண்டியுள்ளது.விற்பனை மையங்களில் மருந்து பெறுவோரில் சிலர், அவற்றை தவறான முறையில் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.

ரெம்டெசிவிர் மருந்தானது, ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு அதனால் பெரிய பலன் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.இதை கருத்தில் வைத்தும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும் தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் வழியாக மட்டுமே இந்த மருந்தை வழங்க வேண்டும்.

நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிட பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.அதன்படி, தனியார் மருத்துவமனைகள், தங்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விபரங்களுடன், மருந்தின் தேவை குறித்த கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.

மருத்துவமனைகளின் கோரிக்கைகளை பரிசீலித்து மருந்து ஒதுக்கப்படும். ஒதுக்கீடு கிடைத்ததும், மருத்துவமனையின் பிரதிநிதிகள், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்கு சென்று மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கண்காணிப்பு

இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள், தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெறப்படும் விலையிலேயே நோயாளிகளுக்கு விற்கப்பட வேண்டும். தவறான முறையில் கள்ளச்சந்தையில் விற்பனைசெய்யாதபடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பர்.நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் மருந்து சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும் மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை எடுக்கும். இவ்வாறு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment