Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 8, 2021

நீட் தேர்வு நடக்கும்! அடித்துச்சொல்கின்றனர் கல்வியாளர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க அறிவுறுத்தல்

கல்வியாண்டு இறுதியில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தும், அரசியல் கட்சியினரின் வாக்குறுதிகளை நம்பாமல், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக, நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு நடக்கவுள்ள தேதி குறித்து, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இன்னும் தெரிவிக்காமல் உள்ளது. 

பொதுத்தேர்வு ரத்து செய்ததால், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டுமென, தமிழக அரசியல் கட்சியினர், குரல் எழுப்பி வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால், நீட் தேர்வும் ரத்து செய்யப்படுமோ, என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் தேர்வு நடக்காவிட்டால், எங்கு சென்று எழுதுவது, தமிழக கல்லுாரிகளில் எந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் சீட் கிடைக்கும்...இப்படி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மனதில் குழப்பம் கும்மியடிக்கிறது.இதுகுறித்து, கல்வியாளர்கள் ஜெயபிரகாஷ்காந்தி மற்றும் நெடுஞ்செழியனிடம் கேட்டோம்.

தேர்வு நடக்கும்:ஜெயப்பிரகாஷ் காந்தி: திடீரென நீட் தேர்வை ரத்து செய்வதில் சிக்கல் உள்ளது. மாணவர்களின் நுழைவு தேர்வு சார்ந்த அறிவிப்புகளை, குறைந்தது 12 முதல் 16 மாதங்களுக்கு, முன்பே தெரிவிக்க வேண்டும். அப்போது தான், முடிவுகளுக்கு ஏற்ப, மாணவர்களால் தயாராக முடியும்.கடந்தாண்டுகளில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும், தற்போது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 

இத்தேர்வை உடனே ரத்து செய்வதில் சாத்தியங்கள் குறைவாக இருப்பதால், தற்போது தேர்வுக்கு தயாராவதில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.ஆனால், அடுத்த கல்வியாண்டில் இருந்தாவது, நீட் தேர்வுக்கு பதிலாக, பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்.

ஏனெனில், மாநில பாடத்திட்டத்தில், இளங்கலை மருத்துவப்படிப்பு முடித்த, பல தமிழக மாணவர்கள், நீட் தேர்வெழுதி, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.மாநில பாடத்திட்டம் மாற்றியது மட்டும் போதாது; பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பிலும் மாற்றம் கொண்டு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்யலாம்.ரத்துக்கு வாய்ப்பில்லை: நெடுஞ்செழியன்அகில இந்திய மருத்துவ இடஒதுக்கீடு, 15 சதவீதமாக உள்ளது. இதற்காகவாவது நிச்சயம் நீட் தேர்வு நடத்தப்படும்.

திடீரென தேர்வு ரத்து செய்தால், தேர்வுக்கு தயாராகும் தற்போதைய, முந்தைய பேட்ச் மாணவர்கள்(ரிப்பீட்டர் பேட்ச்), பெரிதும் சிரமப்படுவர். பொதுத்தேர்வும் நடத்தாத நிலையில், பள்ளிகள் அளிக்கும் மதிப்பெண்தான், மருத்துவ இடங்களை பெற உதவும் என்றால், அதிக மதிப்பெண்கள் போட, தனியார் பள்ளிகளுடன், பெற்றோர் 'பேரம்' பேச வாய்ப்புள்ளது.

ஆகவே, ரத்து செய்ய வாய்ப்பில்லை. தமிழக அரசின் அழுத்தத்தால், அடுத்த கல்வியாண்டில் நீட் தேர்வு ரத்து செய்தால், பொதுத்தேர்வு முறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.குறிப்பாக, தனியார் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு சேர்க்கைக்கு, அதிகபட்ச இடங்கள் நிர்ணயிக்க வேண்டும். ஏனெனில், பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் சேர்க்கை நடந்த போது, குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளில், தலா 2 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். 

ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒருமுறையும், பொதுத்தேர்வு முறைகளில் மாற்றம் வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், நடப்பாண்டு பொதுதேர்வு நடத்தாத நிலையில், நீட் தேர்வையும் ரத்து செய்து விடக்கூடாது என்பதே, பெரும்பாலான மாணவ மாணவியரின் கருத்தாக உள்ளது.

No comments:

Post a Comment