2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் மனநோய்க்கு ஆளாகின்றனர். எனவே, உடனடியாக பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ.1 கோடியே 2 லட்சம் நிவாரண நிதியை வழங்கினர்.
பின்னர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் சார்பாக கொரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைக்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முதல்வரை சந்தித்து ரூ.1 கோடியே 2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மற்ற பள்ளிகளில் சேர்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மனநோய்க்கு ஆளாகியுள்ளனர். எனவே, படிப்படியாக பகுதி நேரமாக பள்ளிகளை திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று நடைபெறும் பழைய பள்ளிகளுக்கு பாடம் நடத்த அங்கீகாரம் வழங்க வேண்டும்.
மேலும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண முறைகேடுகளை சீர்செய்ய முதல்வர் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி கல்வி கட்டணங்களை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment