தமிழகத்தில் செப்டம்பா் முதல் நவம்பா் மாதம் வரை இணையவழியில் ஆசிரியா் தேர்வு வாரியத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியா் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக ஆசிரியா் பதவிகளின் நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் ஆசிரியா் தேர்வு வாரியத்தின் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுதவிர, நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 ஆண்டுகளாகத் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை.
இதனால் ஆசிரியா் தேர்வு வாரியத்தைக் கலைத்துவிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பணி நியமனங்களை மேற்கொள்ளத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் இதற்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்புத் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இணையவழியில் ஆசிரியா் தேர்வு வாரியத் தேர்வுகள் வரும் செப்டம்பா் முதல் நவம்பா் மாதம் வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்வுகள் என்எஸ்இஐடி (இந்தியாவில் அரசுகள், பல்கலைக்கழகங்கள், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையவழி தேர்வுகளை நடத்தித் தரும் நிறுவனம்) மூலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கல்லூரி முதல்வா்கள், செயலாளா்கள், தங்களின் வளாகத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பணியாளா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் மற்றும் பிற பெரிய கல்வி நிறுவனங்கள், இணையவழி தேர்வு மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment