ஐந்து மாதங்களுக்கு பின், தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லுாரிகள், இன்று திறக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு, உளவியல் கவுன்சிலிங் மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக, மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர், கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மாதமாக, கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இன்று முதல் மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதற்கட்டமாக, நேரடி வகுப்புகள் துவங்குகின்றன. அதேபோல, கல்லுாரி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் அரசு மேல்நிலை பள்ளியில், அமைச்சர் மகேஷ் பார்வையிட்டார்.பின், அவர் அளித்த பேட்டி:பள்ளிகளை இன்று முதல் திறந்து, நேரடி வகுப்பு நடத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வருவாய் துறை, சுகாதாரம் மற்றும் பள்ளி கல்வி துறைகளின் சார்பில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம், 'மாஸ்க்' அணிய வேண்டும்.பள்ளிக்கு உள்ளே வரும் போது, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். மாஸ்க் அணியாத மாணவர்களுக்கு, பள்ளிகளில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாணவர்களுக்கு முதல் ஒரு வாரத்துக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி மேற்கொள்ளப்படும். டாக்டர்கள் மற்றும் உளவியலாளர்கள் வாயிலாக, உளவியல் கவுன்சிலிங் அளிக்கப்படும்.பெற்றோர் எந்தவித அச்சமும் இன்றி, மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் திறந்தாலும், 'ஆன்லைன்' வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிடப்பட்டுஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
விடுதி மாணவர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்
கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், மாணவ, மாணவியருக்கான விடுதிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது, மாணவ, மாணவியர் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை விடுதிகளில் தாக்கல் செய்ய உத்தர விடப்பட்டது.
தடுப்பூசி போடாதவர்களுக்கு, நேற்று சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசி போடப்பட்டது. இன்று கல்லுாரிக்கு வரும் மாணவர்களுக்கும், தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாமில், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment