Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 20, 2022

மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக ஒன்றிய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்தரசன் தாக்கல் செய்துள்ள மனுவில், 1976ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்பதால் 1963ம் ஆண்டின் அலுவல் மொழி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.

இதுதொடர்பாக தமிழக அரசு தனது சொந்த விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் குழுக்களை அமைத்து அறிக்கைகளை பெறுவதாக மனுதாரர் கூறுவது கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கையின் வாயிலாக இந்தியை திணிக்க முயற்சிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அவரவர் தாய்மொழியை காக்கவும், தாய்மொழியில் கற்கவும் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் உள்ளது. தாய்மொழியை காப்பது கடமையும் கூட. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

திருமாவளவன் தனது மனுவில், ‘‘இந்தி மொழியின் ஆதிக்கத்தால் மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா போன்ற மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இது இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக உள்ளது. இந்தி இல்லாமல்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்தியை கட்டாயப்படுத்துவது என்பது இந்தி தெரியாத இளம் தலைமுறையினரிடம் கூடுதல் சுமையை திணித்து விடும். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment